Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன்

1. ஆ, பிதா குமாரன் ஆவி,
விண்மண் உலகை எல்லாம்
தாங்கும் சருவ வியாபி
உம்மால் ராப்பகலுமாம்
உம்மால் சூரியன் நிலா
ஓடுது தயாபரா.

2. சாத்தான் தீவினை வீணாக,
என்னைப் போன ராவிலே
தேவரீர் மா தயவாக
கேடும் தீதுமின்றியே
காத்ததால், என் மனது
தேவரீரைப் போற்றுது.

3. ராப்போனாற்போல் பாவராவும்
போகப் பண்ணும், கர்த்தரே
அந்தகாரம் சாபம் யாவும்
நீங்க, உம்மை இயேசுவே
அண்டிக்கொண்டு நோக்குவேன்
உம்மால் சீர் பொருந்துவேன்.

4. வேதம் காண்பிக்கும் வழியில்
என்னை நீர் நடத்திடும்
இன்றைக்கும் ஒவ்வோரடியில்
என்னை ஆதரித்திடும்
எனக்கு நீர்மாத்திரம்
பத்திர அடைக்கலம்.

5. தேகம் ஆவி என்னிலுள்ள
சிந்தை புத்தி யாவையும்
ஸ்வாமி, உமதுண்மையுள்ள
கைக்கும் ஆதரிப்புக்கும்
ஒப்புவிப்பேன், என்னை நீர்
பிள்ளையாக நோக்குவீர்.

6. வானதூதர்கள் அன்பாக
என்னைப் பேயின் கண்ணிக்கு
தப்புவிக்கவும் நேராக
கடைசியில் மோட்சத்து
வாழ்வில் கொண்டு போகவும்
தயவாகக் கற்பியும்.

7. என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும்
ஆ, திரியேக வஸ்துவே,
என் மனுக்காமென்று சொல்லும்
வேண்டிக்கொள்ளச் சொன்னீரே
ஆமேன், உமக்கென்றைக்கும்
தோத்திரம் புகழ்ச்சியும்.

 

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version