Matchimaiyaana thor – மாட்சிமையானதோர்

பல்லவி

மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம்
வா ஆ கல் வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற
மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா

அனுபல்லவி

சூட்சமுறுங் தேவ சாட்சியாங் கற்பனை
துய்யத்தை நரர் மீறி – மகா
துர்க்குணப் பேயின் தந்திரத்தினால்
தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்
சுத்த கிறிஸ்தரசன் – தேவனுட
சித்தன், அமை சிரசன், மாந்தர்களின்
துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்
தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற

சரணங்கள்

1.எருசலை நகர் மருவுங் கல்வாரி
என்னப்பட்ட ஒரு மேடு – அதில்
ஏசுக்கிறிஸ் தெனும் நேசமகத்துவன்
எங்களுக்காய்ப் படும் பாடு – மரக்
குருசில் ஏறியே சிரசில் முண்முடி
கொண்டதும் நொந்ததும் நீடு – அப்போ
கொற்றவன் தன்முகம் சற்றேனுங் காட்டாத
குறையதும் ஒரு பீடு
குருதி வடியவே, சுருதி முடியவே
பருதி மறையவே, திரையுங் கிழியவே
கொலைஞர் அவமதிக்க – துஷ்டனாம்
அலகை மனங்கொதிக்க, கசப்புடன்
கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர்
கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும் – மாட்சி

2.பூலோகத்தாரே இம்மேலான காட்சியின்
புண்ணியத்தை வந்து பாரும் – தேவ
புத்திரன் பக்கத்தில் குத்துண்டு பாய்கின்ற
புனித ரத்தமும் நீரும் – நமை
மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின்
விஸ்தார ஊற்றென்று சேரும் அதில்
விழுந்து ஆத்துமம் முழுகிப் பாவந் தீ
வினை அகன்றிட வாரும்
சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர்
ஜீவனாதிபதி சாவினாலே நம்மைத்
தெய்வ லோகஞ் சேர்க்க – நித்தியமாய்
உய்யும் சுத்தோராக்கத் தேவசுதன்
செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில்
ஜீவன் துடிக்கத்தம் ஆவி விடுகின்ற- மாட்சி

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks