Naan Thothanaaka Vendum – நான் தூதனாக வேண்டும்

1. நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்
பொற் கிரீடம் தலை மேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்.

2. அப்போது சோர்வதில்லை
கண்ணீரும் சொரியேன்
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.

3. பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.

4. மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து வாழுவேன்
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்
அநந்த பாக்கியமே.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks